எஸ்.பி. வேலுமணி
அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக விஜய்க்கு அளிக்கும் வாக்கு, திமுகவுக்கே போய் சேரும் என தொடர்ச்சியாக பேசி வருகிறார். இதனிடையில் செல்வபுரம் பகுதியில் நடிகர் அஜித் குமார் ரசிகர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அஜித் ரசிகர்களிடம் வாக்கு சேகரிப்பு
அதன்படி ஏகே ரசிகர்களிடம் அவர் பேசுகையில், “ஜெயலலிதா இருக்கும்போதே உங்களுடைய தலைவர் அஜித், அவுங்க மீது மிகப்பெரிய மரியாதை வைத்து இருந்தாங்க. அது மட்டும் இல்லாமல் அடிக்கடி சந்திப்பாங்க. ஜெயலலிதா மறைந்த சமயத்தில் அஜித் வெளிநாட்டில் இருந்தாங்க. திரும்பி வந்ததும் அவுங்களோட சமாதியில் மரியாதை செலுத்திட்டு போனாங்க. அவர் மேல எங்க அனைவருக்கும் மிகப்பெரிய மரியாதை உள்ளது.
இப்ப நீங்க எல்லாரும் இங்க வந்து எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கீங்க. அதிமுக ஆட்சியில் கோவைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருக்கோம். நீங்க எல்லாரும் ஆதரவு அளிக்கனும். உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி எனக்கு ஒட்டு போன சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார் எஸ்.பி. வேலுமணி. இதனையடுத்து அஜித் ரசிகர்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
தவெக விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கி அரசியலில் குதித்துள்ள நிலையில், அவர் யாருடைய ஓட்டை பிரிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனிடையில் விஜய்க்கு போட்டி நடிகராக இருக்கும் அஜித்தின் வாக்குகளை பெறுவதில் அதிமுக தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இபிஎஸ் பரப்புரையில் ஈடுபட்ட இடத்தில் அவருக்கு அஜித்தின் புகைப்படம் வழங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஏகே புகைப்படத்துடன் இபிஎஸ்
இதன் காரணமாக அடுத்தடுத்து அவர் செல்லும் இடங்களிலும் ஏகேவின் புகைப்படம் வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியும் அதனை உற்சாகமாக பெற்று வரும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களிடம் வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரிய வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு அதிமுக வகுத்துள்ள வியூகம் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது தேர்தல் ரிசல்ட் அன்றைக்கு தான் தெரிய வரும்.
பரப்புரை ரத்து
இதனிடையில் விஜய் இன்றைய தினம் செய்யவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அவரின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுறது. தேர்தலுக்கு இன்னமும் குறைந்த கால இடைவெளியே இருக்கும் சமயத்தில், விஜய் இன்னமும் தீவிரமான பரப்புரையில் ஈடுபடவில்லை என தவெகவினர் கவலை தெரிவித்த வருகின்றனர். மற்றொரு பக்கம் தேர்தல் தேதி அறிவித்தது விஜய் மக்களுடன் மக்களாகவே இருப்பார் என ஆதவ் அர்ஜுனா பேசியதையும் மற்ற கட்சியினர் இணையத்தில் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
