சென்னை,
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை. தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார்.
முதலில் கூட்டணி கட்சியினருடன் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர்.. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் சந்திப்பு; தமமுக தலைவர் ஜான் பாண்டியனும் இதில் கலந்து கொண்டனர். 4 கட்சிகளுக்கான தொகுதிகள் பாஜகவின் பங்கீட்டில் இருந்து தரப்படும் என கூறப்படும் நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக முக்கிய நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். கே.பி.முனுசாமி, வளர்மதி, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வந்துள்ளனர். அங்கு பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள 45 தொகுதிகளில், அமமுகவுக்கு 12 தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . பாஜகவுக்கு 29 தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளை தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
