தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலியானோருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் திரண்டனர். புரட்சி சதுக்கத்தில் தொடங்கி தெற்கு தெஹ்ரானின் மரணம் அடைந்தவர்களுக்கான பகுதியை நோக்கி ஊர்வலம் நகர்ந்தது. இதில், பலியான நபர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர்.
ராணுவம் மற்றும் குடிமக்கள் என உயிரிழந்த அனைவருக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பயங்கரவாத செயல் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரமலான் புனித மாதத்தின் 21-வது நாளில் இந்த ஊர்வலம் நடந்தது. இஸ்லாமில் முக்கிய நபரான இமாம் அலி இந்த நாளிலேயே வீரமரணம் அடைந்த நிலையில், அதற்கான ஆண்டுதினமும் இந்த நாளிலேயே வருகிறது.
ஈரானில், கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தொடங்கி இதுவரை 200 குழந்தைகள் மற்றும் 190 வீரர்கள் உள்பட 1,262 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 335 பேர் பலியாகி உள்ளனர் என மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
