புதுடெல்லி,
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்; தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வரப்போகிறது. அண்ணாமலைக்கு எங்கும் எந்த மனக்கசப்பும் இல்லை, அவர் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்கிறார்.
விஜய் முதல்முறையாக அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். கவர்ச்சி என்பது மக்களைத் திரட்டவும், ஒன்றிணைக்கவும் உதவும். ஆனால் அரசியலில் ஈடுபடுபவர், முழுநேரமும் அரசியலிலேயே தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். விஜய் களத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது. விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது.
விஜய் பற்றி இப்போதே கருத்து கூறுவது சரியாக இருக்காது. விஜய்யுடன் நாங்கள் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்?; நாங்கள் ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் அதிமுகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ளது.
மல்லிகார்ஜுன் கார்கே மத அடிப்படையில் மக்களை தூண்டிவிடுகிறார். ராகுல் காந்தி அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுத்துள்ளார்; ஆனால் அவர் வேறு எதையோ சொல்லிவிட்டார். அரசியலில் எல்லாச் சூழ்நிலைகளிலும் வார்த்தை வரம்புகள் இருக்க வேண்டும். என்.டி.ஏ.வின் மிகப்பெரிய அரசியல் எதிரி காந்தி குடும்பமும் காங்கிரஸ் சித்தாந்தமும்தான். இவ்வாறு அவர் கூறினார்.
