ஆதம்பாக்கம் ஸ்டேஷனில் நிற்காத MRTS ரயில்… காரணம் என்ன? வேளச்சேரி வழித்தட மக்கள் ஏமாற்றம்! – adambakkam mrts station skip issues for nanganallur pazhavanthangal people via velachery

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை MRTS ரயில் சேவை இணைப்பு சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இடையில் ஆதம்பாக்கம் ஸ்டேஷனில் ரயில்கள் நிற்காமல் செல்வது ஏமாற்றம் அளித்து வருகிறது. இதன் பின்னணி குறித்து விரிவாக அலசலாம்.

Adambakkam MRTS Railway Station Issues
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை புறநகர் ரயில், வேளச்சேரி MRTS பறக்கும் ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் புறப்படும் ரயிலானது ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக பரங்கிமலையை சென்றடைகிறது. நாள்தோறும் 6 ரயில்களை மாறி மாறி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக திகழ்ந்து வருகிறது.

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்

செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி மார்க்கத்தில் இருந்து வருவோர் சென்னை கடற்கரை வரை சென்று வேளச்சேரி பறக்கும் ரயிலை பிடிக்க வேண்டியதில்லை. பரங்கிமலையில் இறங்கினால் புதிய MRTS இணைப்பு ரயில் மூலம் வேளச்சேரியை அடைந்துவிடலாம்.

அங்கிருந்து ஓ.எம்.ஆர் வழித்தடத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்ல முடியும். மார்ச் 14ஆம் தேதிக்கு பின்னர் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை முன்பை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

புழுதிவாக்கம் ஓகே, ஆதம்பாக்கம் நாட் ஓகே
புழுதிவாக்கம் ஓகே, ஆதம்பாக்கம் நாட் ஓகே

இதில் சிக்கல் என்னவென்றால் வேளச்சேரி – பரங்கிமலைக்கு இடையில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களில் புழுதிவாக்கம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. ஆதம்பாக்கம் ஸ்டேஷன் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் தரப்பில் இருந்து வரவில்லை.

இதுபற்றி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகளிடம் கேட்கையில், இதுவரை ஆதம்பாக்கம் ஸ்டேஷன் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. எங்கள் வசம் வந்தால் தான், போதிய ஊழியர்கள் உடன் பயன்படுத்த முடியும். ரயில்களும் நின்று செல்ல முடியும் என்கின்றனர்.

ஆதம்பாக்கம் ஸ்டேஷனில் இருக்கும் பிரச்சினை
ஆதம்பாக்கம் ஸ்டேஷனில் இருக்கும் பிரச்சினை

இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவல் காணப்படுகிறது. ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் மிகவும் நெருக்கமாக கட்டமைக்கப்படவில்லை. வளைவான பாதையில் பயணிக்கும் போது, பிளாட்பார்ம் மற்றும் ரயில் ஆகியவற்றுக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது பயணிகள் இறங்கும் போது தவறி விழ வாய்ப்பிருக்கிறது. கட்டுமானத்தில் ஏற்பட்ட குறைபாடு தான் முக்கிய காரணம் என்கின்றனர். இதை சரிசெய்ய வேண்டியுள்ளது. தற்போது எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லை.

நங்கநல்லூர் பகுதி மக்கள் ஏமாற்றம்
நங்கநல்லூர் பகுதி மக்கள் ஏமாற்றம்

மேலும் லிஃப்ட், எஸ்கலேட்டர், குடிநீர், சிக்னல் போன்ற வசதிகள் எதுவும் முறையாக அமைக்கப்படவில்லை. குறிப்பாக ரயில் நிலையத்தின் அடித்தளம், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் சில பணிகள் எஞ்சியிருப்பதாக தெரிவித்தனர். ஆதம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராததால் அருகிலுள்ள நங்கநல்லூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் MRTS ரயில் சேவையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.

ஆதம்பாக்கம் மல்டி மோடல் போக்குவரத்து
ஆதம்பாக்கம் மல்டி மோடல் போக்குவரத்து

அதுமட்டுமின்றி ஆதம்பாக்கம் ரயில் நிலையம் செயல்படாததால் புழுதிவாக்கம் ஸ்டேஷனுக்கு பலரும் செல்கின்றனர். இங்கு பயணிகள் கூட்டமும், பார்க்கிங் நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் ஆதம்பாக்கம் வழியாக ரெட் லைன் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படவுள்ளது. அது ஆதம்பாக்கம் MRTS ரயில் நிலையத்தை ஒட்டியே செல்லும். அப்படி பார்த்தால் பரங்கிமலை போல மல்டி மோடல் போக்குவரத்து முனையமாக மாறக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.