கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 54 வயது தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு நவம்பர் 27-ந்தேதி அவரது செல்போன் எண்ணை ஒருவர் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் இணைத்து விட்டார். வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி என்ற பெயரில் இருந்த அந்த குரூப்பில் ஆன்லைன் முதலீடு தொடர்பாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதை நம்பி அவரும் தொகை அனுப்ப அவருக்கு லாபம் கிடைக்கவே, தொடர்ந்து ரூ.20 லட்சத்து 17 ஆயிரத்து 459 தொகையை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு எந்த தகவல்களும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன்னை வாட்ஸ்-அப் குழுவில் இணைத்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
