திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட படூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா நாதன் (50 வயது). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டபோது, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
அதை நம்பிய சுஜாதா நாதன் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் கூறியபடி இரட்டிப்பு தொகை அவரது கணக்கில் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பலுக்கு 25 சதவீதம் கமிஷன் பெற்று தங்களது வங்கி கணக்குகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த அஜய் (37 வயது), ரமேஷ்குமார் (37 வயது) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
