கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
காலை முதலே பெண்கள், முதியோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகின்றனர். குறிப்பாக, முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக உற்சாகத்துடன் பங்கேற்று இந்த 3 மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது.
அனைத்து வாக்குசாவடிகளும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்கள் பணியில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பின், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டு, மே -04-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் கேரளம் (140 இடங்கள்), அசாம் (126 இடங்கள்), புதுச்சேரி (30 இடங்கள்) என மொத்தம் 296 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
3 மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி கேரளத்தில் 16.23 % புதுச்சேரியில் 17.41% அசாமில் 17.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளா சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளம் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் மோகன்லால். கேரளம் சட்டமன்ற தேர்தலில் நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி ஜனநாயக கடமையாற்றினார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதிக்கு உட்பட்ட திலாசுப்பேட்டை பிள்ளையார்கோவில் வீதியில் வசித்து வருகிறார். அவர் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து யமாகா பைக்கில் வந்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் சென்று, திருக்கனுார் அரசு பள்ளியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் மடுகரை அரசு நடுநிலைப்பள்ளியிலும், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ரெயில்நிலையம் எதிரே உள்ள குபேர் திருமண மண்டபத்திலும், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரெட்டியார்பாளையம் இமாகுலேட் பள்ளியிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
11 மணி நிலவரம்
வாக்குபதிவு தொடங்கி காலை 7 மணி முதலே 3 மாநிலங்களிலும் விறுவிறுப்பாக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி கேரளாவில் 33.30 சதவிகிதமும், புதுச்சேரியில் 37.06 சதவிகிதமும், அசாமில் 38.98 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

