சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடை நிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்து இருந்தார். அமைச்சர் கோரிக்கையை ஏற்றும், முதல்வர் தங்கள் கோரிக்கை ஏற்பார் என்ற நம்பிக்கை அடிப்படையிலும் போராட்டத்தை கைவிடுவதாக இடை நிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:
இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
