வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறிவாலயத்தில் நாளை நடைபெறும் நேர்காணலில் ஓபிஎஸ் பங்கேற்க உள்ளார்.
அதிமுக டூ திமுக – ஒரு பெரிய தாவு!
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புடனான மோதலுக்குப் பிறகு, தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க அவர் தற்போது திமுக பக்கம் சாய்ந்துள்ளார்.
திமுகவில் விருப்பமனு தாக்கல்!
திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஓபிஎஸ், தற்போது அதிகாரப்பூர்வமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆஜராக உள்ளார்.
எந்தத் தொகுதி?
தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. அண்மையில் முன்னாள் எம்.பியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவிந்தரநாத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்திருந்தார்.
தேனி மாவட்டத்தின் கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் அரசியல் போட்டி சூடு பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் இத்தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திற்காக போடி தொகுதியிலும், தன்னுக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதிகளில் போட்டியிட அனுமதி கோரியும் ரவிந்தரநாத் விருப்ப மனு அளித்து இருந்தார்.
எடப்பாடிக்குக் கொடுக்கப்படும் ‘செக்’!
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது முதல் அவர் ‘திமுகவின் பி டீம்’ (B Team) என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். தற்போது அவர் நேரடியாக திமுகவில் இணைந்தது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்க இது திமுகவுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும் என அரசியல் விமர்சகர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
