சென்னை,
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து பெறுகிறார்.
இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விருது தன் வயதைக் குறைத்துவிட்டதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில்,
’ஞானபீட விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்படும் ஞானபீட விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை தமிழ்பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போதுதான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதைக் குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.
