தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவுடனான தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தொகுதி பங்கீடு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொகுதி பங்கீடுக்கான பணிகளை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக பாஜகவுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்வதற்காக டெல்லி கிளம்பி சென்றுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. காலையிலே சென்னையில் இருந்து டெல்லி சென்றிருக்கும் இபிஎஸ், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதில் தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இபிஎஸ் டெல்லி பயணம்
முன்னதாக அதிமுக, பாஜக இடையிலான தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது. அதிமுகவுக்கு சாதகமான சில தொகுதிகளை பாஜக கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த குழப்பமான சூழ்நிலையில் தற்போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் இபிஎஸ். இதன் மூலமாக தொகுதி பங்கீடு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரனின் திட்டம்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டிடிவி தினகரன் நாளை டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரும் அமித் ஷாவுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இபிஎஸ் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் டிடிவி தினகரன். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் பாஜகவின் முயற்சியின் காரணமாக என்டிஏ கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன். இதனையடுத்து அமமுகக்கான தொகுதி பங்கீடு பாஜக வழியாக நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் அவர் தற்போது எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லிக்கு செல்லவுள்ளார். இதன் காரணமாக நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக சம்பந்தமான தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள்
இதனிடையில் என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 இடங்களை பெற்ற நிலையில், பாஜக அதனை விட கூடுதலான தொகுதிகளை பெறுமா என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸை காட்டிலும் 1 இடம் அதிகமாக பாஜக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் அமமுக
இதுக்குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், விருப்பப்பட்ட தொகுதிகளை கேட்பதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். இதனிடையில் என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு பத்து தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வேண்டும் என டிடிவி தினகரன் விரும்புகிறாராம். ஆனால் அவருக்கு 6 இடங்கள் தர அதிமுக முன்வந்த நிலையில், தற்போது டெல்லிக்கு செல்ல உள்ளார். அங்கு வைத்து அமமவுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படலாம்.
