கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதியும், 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 29ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி இன்று ஜல்பைகுரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி,
தேர்தல் ஆணையம், பாஜக, மத்திய அரசு ஆகியவை அரசியலமைப்பு சாசனத்தை பின்பற்றவில்லை. தேர்தல் ஆணையமும், பாஜகவும் இப்போது மக்களின் வாக்குரிமையை பறிக்கின்றனர். அடுத்து நாளை தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்து உங்கள் குடியுரிமையை பறிப்பார்கள்’ என்றார்.
