சிம்லா
இமாசல பிரதேசத்தின் புதிய கவர்னராக கவீந்தர் குப்தா இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு இமாசல பிரதேசத்தின் தலைமை நீதிபதி குர்மீத் சிங் சந்தாவாலியா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
லடாக்கின் துணை நிலை கவர்னராக பதவி வகித்தவரான குப்தா, தற்போது இமாசல பிரதேசத்தின் 30-வது கவர்னராகி உள்ளார். இதன்பின்னர் சிம்லா நகரில் அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, லடாக் யூனியன் பிரதேசத்தில் ஏழரை மாதங்கள் வரை கவர்னராக பதவி வகித்து சமீபத்தில் அதனை நிறைவு செய்து வந்துள்ளேன் என கூறினார்.
அவர் தொடர்ந்து, மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே பாலம்போல் இருந்து பணியாற்றுவேன். கட்சி அரசியலை கடந்து எல்லோரிடமும் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
சுற்றுலாவுக்கான சிறந்த தலங்களில் ஒன்றாக மாநிலம் உள்ளது. அதுவும் மதம் சார்ந்த சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரவுள்ள ஆண்டுகளில் அது இன்னும் வளர்ச்சியடையும் என அவர் கூறினார்.
