இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்

இஸ்லாமாபாத்-

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ளார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ரத்த உறைவு காரணமாக வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது என்றும், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது 85 சதவீத பார்வை பறிபோய்விட்டது என்றும் அவரது வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இம்ரான் கானின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய மருத்துவக் குழு அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில், இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் புதிய சிறைச்சாலை முழுமையாக கட்டப்பட்டதும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார். புதிய சிறையில் மேம்பட்ட மருத்துவ வசதிகள் இருக்கும்.இஸ்லாமாபாத் கோர்ட்டு இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்துள்ளதால், அவர் தலைநகரில் உள்ள ஒரு சிறைக்கு மாற்றப்படுவார்,” என்றார்.இதற்கிடையே, இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து அவரது கட்சி உட்பட எதிர்க்கட்சியினர்கள் பாராளுமன்றம் அருகே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறும்போது, “இம்ரான் கான் அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும். அவரது உடல்நிலையில் எந்த சமரசமும் செய்யப்படாது,” என்றனர்.

Source link