சென்னை,
சினிமாவில் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ, இப்போது நடிகர் விஜய்யும் அதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் புது வரலான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. தேர்தலில் அக்கட்சிக்கு 30 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறிக்கொண்டிருந்தாலும், கருத்து கணிப்புகளில் சுமார் 14 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைக்க நடிகர் விஜய்யுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தாக கூறப்பட்டது. ஆந்திர துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணும் இதற்கான முயற்சியை மேற்கொண்டார் என்று சொல்லப்பட்டது.
தமிழக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வுடன் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று கூறிவந்தாலும், திரை மறைவில் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றிருந்தால், நேற்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திலேயே பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நடிகர் விஜய்யும் மேடை ஏற்றப்பட்டு இருப்பாராம். ஆனால், இழுபறி நிலை தொடர்ந்ததால், அதற்கான வாய்ப்பு ஏற்படாமல் போய்விட்டதாம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய் இணைந்தால், 60 தொகுதிகளும், துணை முதல்-அமைச்சர் பதவியும் வழங்கப்படுவதாக கூறப்பட்டதாம். ஆனால், விஜய் தரப்போ, கட்சி தொடங்கிய போதே, முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், முதல் 2½ ஆண்டுகள் விஜய் முதல்-அமைச்சராக இருப்பார், அடுத்த 2½ ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டதாம்.
இதனால், பா.ஜ.க. அதிர்ந்து போனதைவிட, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூடுதலாக அதிர்ந்து போனாராம். தமிழக வெற்றிக் கழகத்தின் ‘டிமாண்ட்’ முதல்-அமைச்சர் பதவியாக இருந்தால், கூட்டணி பேச்சு வார்த்தையே வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாராம்.
இப்படி, ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தையை நடிகர் விஜய் நடத்திக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் வேட்பாளர் தேர்வையும் தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான த.வெ.க. வேட்பாளர்களையும் அவர் தேர்வு செய்துவிட்டார்.
தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால், தான் இரட்டை தொகுதிகளில் களம் இறங்கவும் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், ஆளுங்கட்சியான தி.மு.க. தரப்பு, எப்படியும் விஜய்க்கு எதிராக வலுவான வேட்பாளரையே களம் இறக்கும் என்று த.வெ.க.வினரே கூறிவருகிறார்கள்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் நடிகர் விஜய் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இரு தொகுதிகளிலுமே கிறிஸ்தவர்கள் வாக்கு அதிகம் என்பதால், அது தனது வெற்றிக்கு உதவும் என்று அவர் நம்புகிறாராம்.
மொத்தத்தில், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியா? அல்லது தனித்து போட்டியா? என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இரட்டை நிலையில் விஜய் இருந்து வருகிறார். அதே நேரத்தில், தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டால், இரட்டை தொகுதியிலும் அவர் போட்டியிட முடிவு செய்திருப்பது, அரசியலில் புது பார்முலாவாக பார்க்கப்படுகிறது.
