மாஸ்கோ
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 5 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
மேற்காசியாவில் நடந்து வரும் மோதலை நிறுத்தும்படி சீனா, இந்தியா மற்றும் ரஷியா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் இன்று கூறும்போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை சாத்தியமற்றதாக ஆக்கும் ஒரு சூழலை உருவாக்க எல்லா சாத்தியம் வாய்ந்த விசயங்களையும் நாங்கள் மேற்கொள்வோம் என கூறினார்.
இவற்றுடன் தொடர்புடைய நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொது சபை ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் உள்பட சர்வதேச நாடுகளுடன் ரஷியா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று கூறினார்.
பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், அமெரிக்க அரசியல்வாதிகளால் கூட இந்த தாக்குதலுக்கான இலக்கு என்னவென்று தெளிவாக கூற முடியவில்லை என்றார்.
ஆனால், இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு பின்னணியில், பெர்சியன் வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள், ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே பிரிவினைகளை உருவாக்குவது ஒரு காரணியாக இருக்க கூடும் என்று அவர் கூறினார்.
