ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – Kumudam

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம், 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சர்வதேச எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியையும் ஈரான் மூடியதால், உலகெங்கும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் குறித்து முன்னுக்குபின் முரணான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். ஈரான் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என சமீபத்தில் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு முரணாக 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய போர்க்கப்பலை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். அடுத்தபடியாக, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை தளர்த்துவதாகவும், இதனால், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நீங்கி, விலையும் குறையும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் ஈரான் திறக்க வேண்டும். இல்லையெனில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மூலமாக்குவோம் என சமூகவலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதல் ஈரானின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து துவங்கும் என தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி, எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என பதிலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த வாரம் முழுவதும் ஆலோசனைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் சுமுகமான போக்கைக் கருத்தில் கொண்டு, ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்குத் தள்ளிவைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்காலிகத் தாக்குதல் நிறுத்தம் என்பது தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Source link