உடன்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 3 பேர் கைது

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாத்தர்கோன்விளையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரப்பட்டிணம் காவல் நிலையப் போலீசார், வேல்முருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தீவிரமாக தேடி, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாத்தர்கோன்விளை சிவன் மகன் கோவிந்தன்(22) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் சாலையில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link