தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் பகுதிநேர பணியாளர்களாக பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அரசாணையில், ஏற்கனவே ரூ.5 ஆயிரத்துக்கு மேல் தொகுப்பூதியம் பெற்று வரும் பகுதிநேர மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இல்லை எனவும், இதற்கு ஏற்படும் செலவினத் தொகையை கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் எண்ணிக்கை, அந்தந்த மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட கலெக்டரால் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கிராம ஊராட்சிகள் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்கும் பணியில் பகுதிநேர வேலையாக ஈடுபடுத்திட வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் இனிமேல் ஒவ்வொரு விசைப்பம்புக்கும் ஒரு இயக்குபவரை ஈடுபடுத்தப்படுவதை தவிர்த்து 2 அல்லது 3 விசைப்பம்புக்கு மிகாமல் இயக்கும் பணியை ஒருவரிடமே ஒப்படைக்க வேண்டும். இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. தினசரி வீடு தோறும் குடிநீர் வழங்குவதை இந்த பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர் உறுதிசெய்யவேண்டும்.
தேவைக்கேற்ப குளோரின், கிருமிநாசினி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம்செய்யும் பணிகளை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் மேற்கொள்வதை உறுதிசெய்யவேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
