சட்டம் ஒழுங்கு
சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதோடு சமீபத்தில் கொரோனாவில் முதல்வர் போயிருப்பார் என்று இபிஎஸ் பேசியதும் சர்ச்சைகளை கிளப்பியது. அவருடைய இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நான் அப்படி பேசவே இல்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இபிஎஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக பேசி வருகையில் அதைப்பற்றி பேசுவதற்கு இபிஎஸ்ஸுக்கு எந்த தகுதியும் கிடையாது என தடலாடியாக தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை. மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வை டிவியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என்று பேசியவர் எடப்பாடி பழனிசாமி. உளவுத்துறையை கைல வைச்சுக்கிட்டு அவர் இப்படி சொன்னார்.
இபிஎஸ் கண்ணியமாக பேச வேண்டும்
பொள்ளாச்சி வழக்கு, சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் என்று அவருடைய ஆட்சி காலத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தது. இந்த ஆட்சியில் எந்த தவறு நடந்தாலும் முதல்வர் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி கண்ணியமாக பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் செல்வப்பெருந்தகை.
பாஜக மீது சவாரி செய்கிறார்
அதோடு எடப்பாடிக்கு அரசியலும் தெரியாது. ஒன்னும் தெரியாது. பிஜேபி மேல சவாரி செய்து ஆட்சிக்கு வரனும் நினைக்கிறார். முதல்வர் கொரோனாவில் போயிருக்கனும் என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு. முதல்வர், துணை முதல்வர் பற்றி தொடர்ந்து இபிஎஸ் அவதூறாக பேசுகிறார். அவரை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என ஆவேசமாக பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார் செல்வப்பெருந்தகை.
திமுக எம்பிக்கள் கண்டனம்
இதனிடையில் திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். இரண்டாவது இடம் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தில், மன அழுத்தத்தால் இப்படியெல்லாம் பேசி கொண்டிருக்கிறார். முதலில் தன்னுடைய மனநிலையை அவர் பரிசோதித்து பார்க்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதல்வரும், உதயநிதியும் தன்னை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவில் முதல்வர் காணாமல் போய்விடுவார் என்றுதான் சொன்னேன். அவரைப்பற்றி தவறாக எதையும் பேசவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
