விருதுநகர்,
நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா ரெயில் நேற்று மாலை 6.40 மணிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில்நிலையம் வந்தது. பின்னர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்ற போது திடீரென என்ஜின் பழுதானது. இதையடுத்து காட்டுப்பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதற்கிடையே தூத்துக் குடி சென்ற சரக்கு ரெயில் சாத்தூர் அருகே நள்ளி ரெயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதன் என்ஜினை அந்தியோதயா ரெயிலில் இணைத்தனர். இதையடுத்து 3 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணி அளவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
