தமிழகத்தில் சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 32 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ நாட்டின் 80 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது.
சென்ட் போன்ற நறுமணப்பொருள் தயாரிக்க, தமிழகத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் மல்லிகைப்பூ அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விளைச்சலும் அதிகரித்துள்ளதால் மல்லிகைப்பூ விலை மளமளவென குறைந்து வருகிறது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 15 டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ) மல்லிகைப்பூ வருகிறது. ஒரு கிலோ ரூ.400-க்கும், ஒரு படி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கு மேல் விற்பனையானால்தான் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால், தற்போது நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
