சென்னை,
ஐபிஎல் தொடரின் 19வது சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒரு ஆல்-ரவுண்டர் 4 ஓவர்களை வீசவில்லை என்றால், அவரது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின், தனது யூடியூப் சேனலில் பேசும்போது ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர் கிரீனின் பங்கு மற்றும் உடல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “ஏலத்தில் அணிகள் உங்களை வாங்கும்போது, நீங்கள் 4 ஓவர்கள் முழுவதும் பந்துவீசவும், பேட்டிங்கில் பங்களிக்கவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நீங்கள் 2 ஓவர்கள் மட்டும் வீசினால் சம்பளத்தை குறைக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அணிகளுக்கு இருக்க வேண்டும்” என்றார்.
அஷ்வின் கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி கிரீனை வாங்கியது. அவரது உடல் நிலை காரணமாக அவர் அனைத்து போட்டிகளிலும் 4 ஓவர்கள் வீசுவாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
