புவனேஸ்வர்
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரெயில் நிலையம் அருகே, சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கி சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த சம்பவம் இன்று காலை 8:51 மணியளவில் நடைபெற்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
பத்ரக்கில் இருந்து மீட்பு மற்றும் மறுசீரமைப்பு குழு உடனடியாக தடம் புரண்ட இடத்திற்கு அனுப்பப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் ஒரு ஏசி (AC) பெட்டி மற்றும் இரண்டு பொதுப் பெட்டிகள் ஆகும்.
பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
