ராமேஸ்வரம் அருகே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 1.7 கி.மீ பரப்பளவு கொண்ட கச்சத்தீவுக்கு 1920ம் ஆண்டில் இருந்து இலங்கை சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், இந்தியாவிடமே தீவு இருந்து வந்தது. இந்நிலையில், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும் இலங்கை அதிபர் சிறிமாவோவும் தமிழ்நாட்டை கேட்காமலேயே 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பதிலுக்கு, இலங்கையில் பாகிஸ்தான் விமான நிலையம் அமைக்க அனுமதியளிக்கப் போவதில்லை என அந்நாட்டு அதிபர் கூறியதாக இந்திராகாந்தி தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த உண்மையை அண்ணாமலை அறிந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி, கச்சத்தீவு இலங்கைக்கு உரிய அனுமதியின்றி தரப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் தெரிவித்துள்ளார். இது ஒவ்வொரு இந்தியரையும் கோவப்படுத்துகிறது எனவும் காங்கிரசை ஒருபோதும் நம்பக் கூடாது என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மக்கள் நலனை பலவீனப்படுத்த காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

