கடன் தொல்லை: குளிர்பானத்தில் விஷம் கலந்து மகளை கொன்று வியாபாரி தற்கொலை

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), சிவகீர்த்தி (1½) ஆகிய 3 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாலையில் மனோஜ் தனது காரில் மகள்கள் 2 பேரையும் பள்ளியில் இருந்து வழக்கம் போல் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 மகள்களுக்கும் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க கொடுத்தார். பின்னர் அவரும் குடித்துள்ளார். இதில் குளிர்பானம் கசப்பாக இருப்பதாக கூறி இளைய மகள் சிவகங்கா சிறிது குடித்துவிட்டு துப்பி விட்டார்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் மனோஜூம், சிவனந்தனாவும் காரிலேயே மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகங்கா உடனே காரை விட்டு கீழே இறங்கி அந்த வழியாக வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். சில நிமிடங்களில் சிவகங்காவும் மயங்கி விழுந்தாள்.

உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மனோஜ், மூத்த மகள் சிவநந்தனா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். சிவகங்காவுக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சொந்தமாக வியாபாரம் செய்து வந்த மனோஜ் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு வந்ததாகவும், இதில் மனமுடைந்த அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற் கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மன்னார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link