கணவரை ‘காமவெறியர்’ என சித்தரித்து பொய் குற்றச்சாட்டு..

கணவரை அவமதிக்கும் நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியதால் ஹரியானாவில் பஞ்ச்குலா பகுதி உள்ளூர் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. மனுதாரரான கணவர் தாக்கல் செய்த மனுவில், இந்த சூழ்நிலைகள் காரணமாக தாம் கடுமையான மன உளைச்சலுக்கும் மனரீதியான அழுத்தத்திற்கும் ஆளானதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களில், தனியார் பள்ளி ஆசிரியையான மனைவி, வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், கணவருக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கணவரை அவமதிக்கும் நோக்கத்துடன் அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்களுக்கு அவதூறு உள்ளடக்கத்துடன் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் ஆரம்பத்தில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், எந்த கடிதமும் நான் அனுப்பவில்லை என்று மனைவி மறுத்தார். ஆனால் பின்னர் கடிதத்தின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதை எழுதியது தானே என்று ஒப்புக்கொண்டது வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது. கணவர் தரப்பில், அந்தக் கடிதத்தில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் மிகவும் இழிவானவையாகவும், அவரை “காமவெறியர்” என சித்தரிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், மனைவியின் தகாத உறவு அம்பலமானதைத் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செயல்பட்டதாகவும், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். 2003ஆம் ஆண்டு விஜய் குமார் ராம் சௌத்ரி பாட்டே vs நீலா விஜய் குமார் பாட்டே வழக்கை மேற்கோள் காட்டி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் திருமணத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் என்றும், அது மனரீதியான கொடுமைக்கு இணையானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி புனீத் மோகன் சர்மா தலைமையிலான நீதிமன்றம், மனைவி அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்தபோது, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கணவருக்கு ஆழ்ந்த மனவேதனை, அவமானம் மற்றும் சமூக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கண்டறிந்தது.

மேலும், இத்தகைய செயல்கள் தொடர்ச்சியான மனஅழுத்தத்தையும் அவமானத்தையும் உருவாக்கும் வகையில் உள்ளதால், இது இந்து திருமணச் சட்டம் பிரிவு 13(ia) கீழ் “மனரீதியான கொடுமை” எனக் கருதப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், கணவன்–மனைவி இணைந்து வாழ்வது சாத்தியமற்றது எனக் கூறி, செலவுத் தொகையுடன் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கப்பட்டது.

Source link