ஈரான் மீது கடந்த மாதம் 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற் றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.
இதில் மற்றுமொரு இழப்பாக அந்த நாட்டின் உச்சபட்ச தேசிய பாது காப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் பலியானார். நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான இவர், டிரம்ப் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையில், கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அந்தவகையில் ஈரானின் மிகவும் அதிகாரம் கொண்ட நபராகவும் இருந்தார்.
இதைப்போல ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் தலைவர் ஜெனரல் கோலம் ரெசா சுலைமானியும் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.இவர்கள் இருவரும் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் பலியாகினர்.எனவே இருவரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் நேற்று தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. குறிப்பாக இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசி அதிர வைத்தது. இன்று ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் ஒன்றான ராஸ் லஃபானை ஈரான் தாக்கியுள்ளது. கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ராஸ் லஃபான் பெரும் சேதம் அடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நடத்திய தாக்குதால் கடும் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் கத்தாரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினால் மட்டுமே சவுத் பார்ஸ் எண்ணெய் வயலில் இஸ்ரேல் மீண்டும் தாக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், இஸ்ரேலின் உதவி இல்லாமலேயே அமெரிக்கா, பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கும்” என்று எச்சரித்தார்.
