ஒட்டாவா,
கனடா நாட்டின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அந்த பள்ளியின் அருகே அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் செல்போன் மூலமாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. பள்ளி வளாகத்தை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பள்ளி வளாகத்திற்குள் 6 பேர், குடியிருப்பு பகுதியில் 3 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
