கனமழைக்கு தாங்காத பெங்களூரு ஏர்போர்ட்… திடீர்னு வந்த மினி வாட்டர் ஃபால்… பயணிகள் சிரமம்! – bengaluru airport mini waterfall roof leaks after heavy rain and flood

பெங்களூரு நகரில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

Bengaluru KIA Heavy Rain Issues(புகைப்படங்கள்Samayam Tamil)
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. குறிப்பாக கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. இது விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் மற்றும் வெளியூரில் இருந்து வந்திறங்கிய பயணிகளுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியது. மோசமான வானிலை காரணமாக பெங்களூரு வர வேண்டிய 4 சர்வதேச விமானங்கள் உட்பட மொத்தம் 30 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

பெங்களூரு ஏர்போர்ட் நீர்வீழ்ச்சி

அதன்படி, சென்னை, கோவை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தரையிறக்கப்பட்டன. மேற்சொன்ன 4 சர்வதேச விமானங்களில் 3 பயணிகள் விமானம், 1 சரக்கு விமானம் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் விமான நிலையத்தில் ஓரிடத்தில் திடீரென நிலத்திற்கு அடியில் இருந்து தண்ணீர் வெளியே பீறிட்டு வரத் தொடங்கியது. இது பார்ப்பதற்கு நீர்வீழ்ச்சி போல காட்சி அளித்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

நாளைக்கு மழை பெய்யுமா ?

தலைநகரில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு

விமான நிலையத்தின் உட்புறம் மட்டுமின்றி, வெளியேயும் கழிவுநீர் வழித்தடங்கள் நிரம்பி சாலையில் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மீதான கேள்வியை எழுப்பியிருக்கிறது. பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விடும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்று சொல்வது போல, பாஜக, காங்கிரஸ் என இரண்டு ஆட்சியிலும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் சர்ச்சையாகி வருகின்றன.

இண்டிகோ நிறுவனம் விடுத்த அலர்ட்

அதைத் தான் நேற்றைய சம்பவம் உணர்த்தி இருக்கிறது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அலர்ட் விடுத்துள்ளது. இன்றும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் விமானப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் இணையதளத்தில் உரிய அறிவிப்புகளை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப பயணங்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் செய்திக் குறிப்பின் படி, அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும். பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள், மைசூரு, துமகுரு, கோலார், சிக்கபல்லபூர், ராமநகரா, மாண்டியா, ஹாசன், சிக்கமகளூர், குடகு ஆகிய தெற்கு உட்புற கர்நாடகா மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மார்ச் 21க்கு பின்னர் மழை குறையும்

தர்வாத், பெலகாவி, பாகல்கோட், கடக், ஹாவேரி, தாவனகெரே, பல்லாரி, கொப்பர், ராய்ச்சூர், கலபுர்கி, பிடார் ஆகிய வடக்கு உட்புற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தக்‌ஷின கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மார்ச் 21ஆம் தேதிக்கு பின்னர் மழைப்பொழிவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.