நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசிலியலுக்குள் நுழைய விரும்புவதாக தகவல்கள் கசிகின்றன….
கனிமொழியை ஓரங்கட்டுகிறதா திமுக?
தென் மாவட்டங்களில் வலிமையான அணியை கனிமொழி உருவாக்கி வருகிறார் என்றும் அது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அச்சுறுத்தலாக மாறும் எனவும் திமுக தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது. பலகாலமாக கனிமொழியை ஓரங்கட்டப் பார்ப்பதாக பேச்சுக்கள் எழுந்தவண்ணமே உள்ளன.கடந்த 2021 -ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வளம் வந்து தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் கனிமொழி, ஆனால் தேர்தல் வெற்றி பெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் கனிமொழியையும், அவரது தாயார் ராசாத்தி அம்மாளையும் சந்திக்காமலே இருந்தார். அதன் பிறகு கனிமொழி தரப்பு அப்செட்டில் இருப்பதை உணர்ந்து, முதல்வராக பதவியேற்ற பின்பு சென்று சந்தித்தார். இப்படி கனிமொழிக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் எதுவும் முறையாக கிடைக்கவில்லை என்ற கருத்துக்கள் நிலவுகிறது.
இதற்கிடையில்தான், மாநில அரசியலில் ஈடுபட விரும்பிய கனிமொழியை திமுக தலைமை டெல்லியிலேயே வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியா கூட்டணி அமைந்தபோது மத்தியில் திமுகவிற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதால் கனிமொழி டெல்லி விவகாரங்களை சமாளித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை convince செய்திருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நீண்டகால பயன்களை தரவில்லை. மேலும் மத்தியில் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தற்போது எங்கே எனக்கூட தெரியவில்லை.
ஆனால் அதற்கு இடையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மாறிவிட்டார். மேலும் கனிமொழி உதயநிதியின் அரசியலுக்கு போட்டியாக மாறிவிடுவாரோ என்ற எண்ணம் இருந்தாலும் உதயநிதியும் கனிமொழியும் பொது மேடைகளில் ஒன்றாக கூடுவதை தவிர்த்தனர். மேலும் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கனிமொழி புறக்கணிக்கப்பட்டு உதயநிதி வரவேற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த முறை தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் 3.192 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி தென்மாவட்டங்களில் தனக்கென ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு இடையில் மாநிலங்கள் அளவில் நடைபெறும் கட்சி சார்ந்த கூட்டங்களிலோ அல்லது இப்போது நிகழ்வுகள் எல்லாம் கனிமொழியை பகிரங்கமாகவே ஓரம் கட்டியதாக சில தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமொழி தனது செல்வாக்கை உயர்த்த கடுமையாக போராடி வருகிறார். இதற்கு மாற்றாக அண்ணா அறிவாலயத்தில் அறை கொடுத்தது, பெரியார் விருது கொடுத்தது இது எல்லாமே கனிமொழியை சரி கட்டதான் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
இதுகுறித்து தனது வருத்தத்தை கனிமொழி ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறதாக சொல்லப்படுகிறது, அதோடு மட்டுமல்லாது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து எதையுமே விவாதிக்காத ஸ்டாலின் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களை மட்டும் பேசி அனுப்பி விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கனிமொழி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தென் மாவட்ட தொகுதி வேட்பாளர் நேர்காணலுக்கு கனிமொழி அழைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தேர்தல் சமயத்தில் கட்சிக்குள் நடக்கும் சலசலப்புக்களை திமுக தலைவர் எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.
