கமல்ஹாசன் செய்தது தியாகம் அல்ல துரோகம்: வானதி சீனிவாசன்

புதுச்சேரி,

பா.ஜனதா கட்சி தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, இந்தியா கூட்டணி பெயர் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் கூட்டணி கிடையாது. எந்த அளவுக்கு காங்கிரஸ்-தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு புதுச்சேரி சிறந்த உதாரணம். ஒரே தொகுதியில் இரு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

சிறிய மாநிலத்தில் கூட அவர்களால் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை. இவர்களால் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. தேர்தலில் இது நட்பு ரீதியான போட்டி என்று சொல்கிறார்கள். தி.மு.க.-காங்கிரஸ் பிரிந்திருப்பது எங்களுக்கு சாதகமல்ல. தேர்தலே எங்களுக்கு தான் சாதகம்.

கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும். அதேபோல் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இதுவரை இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கத்தில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைவார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு தி.மு.க. ஒரு அசைன் மெண்ட் கொடுத்தது. அதை அவர் முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நின்றவர்கள் தெருவில் நிற்கின்றனர். கமல்ஹாசன் செய்தது தியாகம் அல்ல. தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link