சென்னை,
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989-ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்தது. இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து, நகைச்சுவை சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘மீன்முள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்கை அமரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சினிமாவில் இதுவரை 1,800 பாடல்களை எழுதியுள்ளதாகவும், அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த புத்தகத்தை இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்னர், ‘கரகாட்டக்காரன்–2’ படம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கை அமரன், கவுண்டமணிக்கு தற்போது உடல்நலம் சரியில்லை, செந்தில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை , ராமராஜனின் தோற்றம் மாறிவிட்டதாகவும், கனகாவும் உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இவர்கள் அனைவரையும் வைத்து மீண்டும் படம் எடுத்தால் அது நன்றாக இருக்காது என்பதால் ‘கரகாட்டக்காரன்–2’ உருவாகாது என்று அவர் கூறினார்.
