கருப்பு சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – தே.மு.தி.க. குறித்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

சென்னை,

திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தை தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link