ஐதராபாத்,
முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார். வரலட்சுமி தற்போது ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த 6ந் தேதி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி வரலட்சுமி பேசியுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. “காசு இல்லாமல் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள்? நிதி ஆதாரத்தை திட்டமிட்டுவிட்டு அதன் பின் குழந்தை பற்றி திட்டமிடுங்கள். குழந்தைகள் பெற்றுக் கொள்வது எளிது. ஆனால் அவர்களை பாதுகாத்து வளர்த்திட வேண்டும். இன்றைக்கு பொருளாதார நிலைமை கணிக்க முடியவில்லை. குழந்தை பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறோம் என்று நொந்துகொள்கிறார்கள். அந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கிறார்கள்.
நான் குழந்தைகளுக்கு எதிரானவள் அல்ல. அதற்காக யோசிக்காமல் செய்யும் விஷயங்களுக்கு ஆதரவும் தரமாட்டேன். திருமணத்துக்கு பிறகு நிதி ஆதாரத்தை திட்டமிட்டு, காசு இருந்தால் பின்னர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த குழந்தைகளுக்காக யாரிடமும் போய் உதவி கோராதீர்கள். என்னிடம் பணியாற்றுவோர் மற்றும் நெருங்கி பழகுபவர்களிடம் நான் சொல்வது இதைத்தான்”, என்று வரலட்சுமி தெரிவித்தார்.
