காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு சங்கர மடம் இந்து மதத்தை பரப்பி கல்வி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 68-வது மடாதிபதியாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளும், 69-வது மடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் இருந்து மரணம் அடைந்தனர். 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுதலின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியை சேர்ந்த துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் எனும் இயற்பெயரை கொண்ட கணேச சர்மா திராவிட் காஞ்சி சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் பாசரா பகுதியில் உள்ள ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவையாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பஞ்சகங்கா குளத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,கணேச ஷர்மா திராவிட்டுக்கு சன்யாச தீஷை வழங்கி இளைய மடாதிபதியாக நியமித்து ஆசி வழங்கினார். மேலும், இளையமடாதிபதிக்கு ’ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று நாமம் சூட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு சங்கராச்சாரியார்களும் திருக்குளத்தில் இருந்து ஒன்றாக வந்து காமாட்சியம்மனை தரிசனம் மேற்கொண்டனர். அதனைதொடர்ந்து சங்கரமடம் அமைந்துள்ள சாலை தெரு பகுதிக்கு இருவரும் ஊர்வலமாக வருகைதந்து சங்கரமடத்தில் அவருக்கு பதவி பிரமாணம் என்று சொல்லப்படக்கூடிய பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் 71-வது மடாதிபதி பதவியேற்பு விழாவையொட்டி திருக்கோவில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதோடு,நான்கு ராஜவீதிகள் முழுவதும் வாழை கன்றுகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. https://trumpetresearch.com/

Source link