காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரியை குத்திக்கொன்ற இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு ஹிம்சிகா என்ற மகளும் ஹர்திக் (வயது 25) என்ற மகனும் இருந்தனர்.

ஹிம்சிகா குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹர்திக்கும் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஹர்திக் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்குமுன் அந்த காதல் தோல்வியடைந்தது. இதனால் ஹர்திக் மன உளைச்சலில் இருந்த நிலையில் சகோதரியான ஹிம்சிகா அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். மேலும், ஹர்திக்கை அவ்வப்போது கிண்டல் செய்தும் வந்தார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த ஹர்திக்கை ஹம்சிகா மீண்டும் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்திக் வீட்டில் இருந்த கத்தியால் சகோதரி ஹிம்சிகாவை சரமாரியாக குத்தினார். இதில் ஹிம்சிகா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். சகோதரியை கொன்ற ஹர்திக் தனது தாயார் நீலிமாவையும் கொல்ல முயற்சித்துள்ளார்.

நீலிமாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்ற நிலையில் ஹர்திக் வீட்டில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ஹிம்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ஹர்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source link