சீதாராமம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீப காலமாக நடிகர் தனுஷை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், “காதல் என்றால் உங்களைப் பொறுத்தவரை என்ன?” என்ற கேள்விக்கு நடிகை மிருணாள் தாக்கூர் அளித்துள்ள பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் அது ஏற்பட வேண்டும். காதல் ஒருவரை மேம்பட்ட நபராக மாற்றும் சக்தி கொண்டது. எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
காதலில் மிக முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும், காலம் எவ்வளவு மாறினாலும் காதல் மட்டும் மாறாது.
ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக சொல்வேன். காதலில் இருப்பவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. நீங்கள் காதலில் இருந்தால், அவர்களிடம் முழுமையாக சரணடையுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
