கோடை காலத்தில் ஆறுகள், நதிகளில் குளிக்க பலரும் விரும்புவார்கள். குஜராத் மாநிலம், பொய்ச்சா பகுதியில் உள்ள நர்மதா நதியில் குளிப்பதற்கு கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமாகும். இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நர்மதா ஆற்றில் படகு சவாரி செல்வது, ஆற்றில் குளிப்பது என உற்சாகமாக தங்கள் பொழுதை கழிப்பர்.
நர்மதை ஆற்றில் படகு சவாரி செய்யும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நர்மதா மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் உள்ளூர் படகு உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் நதியில் படகுகளை இயக்க தடை விதித்தது. இருந்தாலும் படகு ஓட்டுனர்கள் தடையை மீறி படகுகளை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நர்மதா நதியில் குளித்த சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரை தேடும் பணியைத் தொடங்கினர்.
NDRF மற்றும் வதோதரா தீயணைப்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருவரின் உடல்கூட கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

