அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. ஒருமாதத்திற்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. இதனால், அபுதாபி, துபாய், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் புரட்சிகர காவல் படையும் களத்தில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே இனி தங்களது இலக்கு என தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட 18 நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களில் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக ஈரான் கருதுகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது. ஈரான் கூறியது போல தாக்குதல் நடந்தால் பெரிய அளவில் தொழில் நுட்ப துறையில் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
