சென்னை,
திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு முடிவான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை. 3-வது முறையாக வந்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். மற்ற கட்சியினரும் 2 முறை, 3 முறை வந்தார்கள் அல்லவா? அவர்களையும் காலதாமதம் என்று சொல்ல முடியுமா? சரியான நேரத்தில் சரியான முடிவை அகில இந்திய காங்கிரசும், திமுகவும் எடுத்துள்ளது.
கூட்டணி ஒப்பந்தமானதில் மனநிறைவோடு இருக்கிறோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யார் போட்டியிடுவார்? என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
