அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிலையில் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி இந்து சேனாவின் தேசியத் தலைவர்ர் சுர்ஜித் சிங் யாதவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் “அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடிப்பது சட்டத்தின் செயல்முறையைத் தடுக்கவும், நீதியின் போக்கை சீர்குலைக்கவும் வழிவகுக்கும். டெல்லியில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்கும். ஒருவேளை அவர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டால், கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்படும் ஆவணங்களை சிறை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்ட பிறகே அனுமதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று (28-03-2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்குவதில் துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் எனக் கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

