பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் உறவினரின் உதட்டை கடித்து காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மோதல் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். கணவன்-மனைவி பிரச்னை, குடும்ப சண்டைகள், முன்விரோத பகை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பார்க்கிறோம். சில பிரச்னைகள் பேச்சுவாத்தையின் மூலம் முடிகிறது. பல பிரச்னைகள் காவல் நிலையம் வரை சென்று முடிகிறது. அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் உதட்டை கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் சென்னை பெரவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று பேக்கரி கடையில் இருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினர் ஆரோக்கியதாஸ் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ரஞ்சித்குமாரிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கினார். அவரின் உதட்டை கடித்து காயப்படுத்தி உள்ளார்.
தாக்குதலில் ரத்த காயடைந்த ரஞ்சித்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயபிரதாப் என்பவர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

