கொச்சி
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இன்று ஒரே கட்ட தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் இன்று கூறும்போது, தற்போது காணப்படும் சட்டசபை தேர்தலின் நிலவரப்படி, 90 சதவீத வாக்கு பதிவு என்ற இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.
அனைத்து வாக்காளர்களும் வந்து தங்களுடைய உரிமையின்படி, வாக்களிக்கும்படி அவர் அப்போது வலியுறுத்தி கேட்டு கொண்டார். இன்று காலை 9 மணியளவில் 16.23 சதவீத வாக்குகளும், 11 மணியளவில் 33.28 சதவீத வாக்குகளும் மற்றும் மதியம் 1 மணியளவில் 49.70 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. சீராக வாக்கு பதிவானது அதிகரித்து வந்துள்ளது. இதனால், 90 சதவீத வாக்கு பதிவுக்கான சாத்தியம் காணப்படுகிறது.
தொடர்ந்து அவர் கூறும்போது, 30 ஆயிரம் வாக்கு மையங்களிலும், அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகி வருகின்றன என்று கூறினார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்தது இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதற்கான முக்கிய காரணம் ஆகும் என்று கூறினார்.
