மேற்கு ஆசிய நாடுகள் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி, “தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் காரணமாக, சவாலான உலகளாவிய நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. எனவே நாம் தயாராகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்; நாம் கோவிட்-19 காலகட்டத்தை எதிர்கொண்டதைப் போலவே, மீண்டும் அதே போன்ற ஒரு சூழலை எதிகொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?. மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார்.

