சென்னை,
சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பிரசாரம் செய்தார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரசாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சி அதிமுக. ஓரிரு நாட்களில் அதிமுகவின் அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் பதறி கொண்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தகுந்த அந்தஸ்தை கொடுப்பதில்லை.
திமுக 20 நாட்களாக கூட்டணி அமைக்க போராடி வருகிறது. திமுக கூட்டணியில் கடந்தமுறை போட்டியிட்ட இடங்களை விட, குறைந்த இடங்களையே கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கட்சியை விட அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடங்களை திமுக தந்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் போராடி 8 தொகுதிகளை பெற்றுள்ளார். திமுகவை நம்பினால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். திமுக ஒரு குடும்ப கட்சி; வாரிசு அரசியல் செய்கிறது. அதிமுகதான் மக்களுக்காக செயல்படும் கட்சி. அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக திறந்து வைத்தது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. கல்விக்கடனை ரத்து செய்யவில்லை. திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பலகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 73 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் சுமையை அதிகரித்துள்ளது திமுக அரசு. கூடுதல் வருவாய் வந்தும் திமுக அரசு கடன் வாங்குவதற்கு ஊழலே காரணம்.
கொள்ளை அடிப்பது மட்டுமே திமுகவின் குறிக்கோள். கலெக்சன், கரப்ஷன், என்பதுதான் திமுகவின் தாரக மந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.
