தமிழகத்தில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றியும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
6 – 9ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்
இந்த சூழலில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. வரும் 16ஆம் தேதி வியாழன் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 10 முதல் 24 வரை நடத்த திட்டமிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
4, 5 ஆகிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 6 மற்றும் 1, 2, 3 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் இறுதி பருவத் தேர்வுகள் தொடங்குகின்றன. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஏப்ரல் 16 உடன் இறுதி பருவத் தேர்வுகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு ஆலோசனை
அதன்படி, அடுத்த நாளில் இருந்து கோடை விடுமுறை தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் அன்றைய தினமே 2026-27ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜூன் 4ஆம் தேதி வியாழன் அன்று பள்ளிகளை திறக்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் ஏப்ரல் 17 முதல் மே 31 வரை 45 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கவுள்ளது.
ஏப்ரல் மாதம் – தமிழகத்தில் வெப்ப அலைகள்
ஒருவேளை ஜூன் 3 வரை நீடித்தால் 48 நாட்கள் விடுமுறை கிடைக்கும். சில தனியார் பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதியே இறுதி பருவத் தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. அவர்களுக்கு முழுமையாக இரண்டு மாதங்கள் (62 நாட்கள்) கோடை விடுமுறை கிடைக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோரத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழகத்தின் சில பகுதிகளிலும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகலாம். இதனால் வெப்ப அலைகள் (Heat Wave) ஏற்படும் காலங்கள் உருவாகலாம் என்று எச்சரித்துள்ளது.
பெற்றோர்கள், பிள்ளைகள் கோடை வெப்பம் உஷார்
இடையிடையே மழை பெய்து ஓரளவு நிவாரணம் அளித்தாலும், வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் தொடரும். எனவே பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கவனத்தில் வைத்து கொண்டு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மே மாதம் – பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு
ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், புதிய கல்வியாண்டின் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவை வழங்க தமிழக அரசு திட்டமிடும். இதற்கான வேலைகளை மே மாதத்தின் பாதியில் இருந்தே தொடங்கிவிடும்.
