திமுக இரண்டாவது முறையாக ஆட்சி
இந்நிலையில் தற்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை என்ற கருத்தை மீண்டும் முன்வைத்துள்ளார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையையும் துவங்கி விட்டனர்.
நயினார் நாகேந்திரன் கருத்து
அந்த வகையில் சிவகங்கை திருப்பத்தூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கலைஞர் கருணாநிதி இருந்த சமயத்திலே திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. கோவையில் வாக்குக்கு தங்க நாணயம் வழங்கி வருகிறார். இதையெல்லாம் தாண்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை
முன்னதாக நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு என்ன ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் கிடையாது. கட்டம் சரியில்லை என்று பேசினார்கள் உழைப்பை மட்டும் நம்பிய நான், எதிர்கட்சிகளின் கருத்தையெல்லாம் உடைத்து முதல்வர் ஆனேன். அதே மாதிரி தற்போது இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது கிடையாது என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.
எதிர்கட்சியினர் தொடர் விமர்சனம்
2021 ஆம் ஆண்டு எப்படி மூட நம்பிக்கையை உடைத்து ஆட்சி அமைத்தோமோ, அப்படி 2026 தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கடந்த முறையை விடவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து இரண்டாவது ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு கிடைக்காது என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதனை உடைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
பல முனை போட்டி
இதனிடையில் இந்த முறை தேர்தலில் பல முனைகளில் போட்டி நிலவி வருவதும், அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. திமுக, அதிமுக, நாதகவை தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை தேர்தலில் களமிறங்கியுள்ளது. அதே போல் ராமதாஸ் – சசிகலா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர். மேலும் புதிய தமிழகம், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் தனித்து போட்டியிடுகிறது.
செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு
இப்படி பல முனைகளில் இருந்து போட்டி நிலவி வருவது தமிழக அரசியல் களத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையில் அதிமுக கோட்டையான கோவை பகுதியில் திமுக சார்பாக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர்மீது அண்ணாமலை உள்ளிட்ட எதிர்கட்சியினர் தொடர்ந்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நயினார் நாகேந்திரன், கோவையில் வாக்குக்கு செந்தில் பாலாஜி தங்க நாணயம் வழங்குவதாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
