கோவை: யூடியூப் வீடியோ பார்த்து தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

கோவை,

மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் உள்ளிட்ட மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செல்லாண்டிகவுண்டனூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார், அங்குள்ள தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்கான பேரல்கள் இருந்தன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட தோட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத (வயது 39) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் அருண் பிரசாத், அவரது நண்பரான காரச்சேரியை சேர்ந்த முத்தான் என்பவர் கொடுத்த யோசனையின்பேரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்கு தோட்டத்தில் வேலை பார்க்கும் செல்லாண்டிகவுண்டன்புதூரை சேர்ந்த சின்னகுட்டி(24) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் செல்போனில் யூடியூப் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறல், வெள்ளை வேலம்பட்டை 5 கிலோ மற்றும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Source link